தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி தினத்தன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்தத் தைப்பூச தினத்தைக் கொண்டாடுவதற்கு வேறு காரணமும் கூறப்படுகிறது.

இயற்கையை மட்டுமே சார்ந்திருந்த மக்கள் காடுகளை விளை நிலங்களாக மாற்றினர். இந்த நிலங்களிலிருந்து அறுவடை என்பது தை மாதத்தில்தான் நடக்கும். இந்த அறுவடை எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பவன் இறைவன்.

வித்தைக் கொடுக்கும் இறைவனுக்கு விளைவைக் கொடுக்கும் நாளாக இந்தத் தைப்பூசம் திகழ்கிறது. வித்து என்பது இறைவன் மட்டுமே கொடுக்கும் ஒன்று. அந்த வித்து மூலமாகத்தான் விளைவை மனிதன் உருவாக்குகிறான். ஆக வித்தைக் கொடுத்த வித்தயைக் கற்ற இறைவனுக்கு விளைவைக் கொடுக்கும் ஒரு தினமாக தைப்பூசம் இருக்கிறது

அன்றைய மக்கள் தங்களில் வயலில் கிடைக்கும் அனைத்து விளைச்சலையும் தலைச் சுமையாக சுமந்து வந்து முருகனுக்குப் படைத்து நன்றி செலுத்துவார்கள். மலையில் இருக்கும் முருகனுக்குக் காணிக்கை செலுத்தினர்.

சங்க இலக்கியங்களில் "கடி உண் கடவுள்" என்று இறைவன் குறிப்பிடப்படுகிறான். இங்கு 'கடி' என்பது புதியது. 'உண்' என்பது உண்ணுகின்ற என்று பொருள். ஆகக் கடவுள் என்பவன் புதியதை உண்ணுகின்ற கடவுள் என்று பொருள்படுகிறான்.

இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக பழனியில் இன்னும் ஷர்ப காவடி எடுக்கிறார்கள். விளைச்சலைப் பிற பிராணிகளிடமிருந்து காப்பாற்றுவது ஸ்ர்பம். அதனால் பாம்பை காவடியாக எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.



Picture credit: TheStar and Avignettist